28/08/2016
சாப்பாடு எப்படி சாப்பிடுவது?
பெரியவர்கள் உணவருந்தியதும் அன்னதாதா சுகிபவ என்று வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம். சாப்பிடுவது அன்னமளிப்பது இரண்டுமே சரிவர செய்யப்பட வேண்டிய விஷயங்கள். அன்னபிரம்மம் என்று உணவை பிரம்மத்துக்கு சமமாக உயர்த்துகிறது உப நிஷத் ஆக சாப்பிடுவது என்றாலும் உணவை காக்கவைக்ககூடாது. அன்னமாகிய உணவை உண்ணத் துவங்கும் முன்னர் இந்த உணவு என்றைக்கும் கிடைக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லி வணங்க வேண்டும். சாப்பிடுமுன் கை கால்களை அலம்பி வந்து ஈரம் காயும் முன் சாப்பிடவேண்டும். ஏதேனும் விரிப்பு அல்லது பாயின் மேலே அமர்ந்து சாப்பிட வேண்டும். வாழை இலை நுனி உண்பவருடைய இடப்புறம் இருக்கவேண்டும். தெற்கு நோக்கி அமர்ந்து உண்டால் புகழ் கிடைக்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் பலம் கூடும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வச் சேர்க்கை ஏற்படும். வடக்கு முகமாக அமர்ந்து உண்ணக்கூடாது.
சாப்பிடும்போது முதலில் இனிப்பு உவர்ப்பு புளிப்பு கடைசியாக கசப்பு என்ற வரிசையில் சாப்பிட்டு பின் நீர் பருக வேண்டும். பெண்கள் திருமண பந்தியிலும் பிரயாணத்திலும் கணவனுடன் சேர்ந்தே சாப்பிடவேண்டும். சாப்பிடும்போது கையைத் தரையில் ஊன்றியபடி உண்ணக்கூடாது.
இடது கையால் உணவு பரிமாறிக்கொண்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனவே யாராவது உணவு பரிமாறவேண்டும். இருட்டில் உணவு அருந்தக்கூடாது. சாப்பிடும்போது விளக்கு திடீரென அணைந்து விட்டால் சூரியனை மனதில் தியானித்துவிட்டு மறுபடி விளக்கை ஏற்றி வைத்து பின்பே சாப்பிடவேண்டும்.
வாழை தொன்னை பலா இலைகளில் சாப்பிடுவது நல்லது. வாழையிலையில் உணவை வைத்து சாப்பிடுவதால் ஆயுள் வளரும் இள நரை ஏற்படாது. வீட்டுக்கு வந்த் புதுமருமகளையும் நோயாளிகளையும் கர்ப்பிணிப்பெண்களையும் குழந்தைகளையும் வயதானவர்களையும் முதலில் சாப்பிட சொல்ல வேண்டும். பதார்த்தம் அல்லது சாதத்தை கைகளால் பரிமாறக்கூடாது கரண்டியால் தான் பரிமாறவேண்டும்.
அறிவியல் உண்மைகள்
அன்னத்தை ஆராதிப்பதால் நன்றியுணர்ச்சி மேம்படுகிறது. தரை விரிப்பின் மேல் அமர்ந்து உண்பதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும் சக்தியிழப்பு தடுக்கப்படுகிறது. வாழையிலையில் உணவு உண்பதால் அதன் குளோரோபில் உணவில் கலந்து செரிமானத்துக்கும் இளமையாக வாழ்வதற்கும் உதவுகிறது.
கைகளால் பரிமாறாமல் கரண்டியை உபயோகிப்பதால் உணவில் சுத்தம் பராமரிக்கப்படுகிறது. உண்ணும் முறையறிந்து தொலைக்காட்சி பார்க்காமல் புத்தகம் படிக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.