12/04/2016
Thala Pola Varuma
எனக்குப் பிடிக்காத விஷயத்தை மக்கள் மீது திணிக்க மாட்டேன்! – அஜீத் ‘ப்ளாஷ்பேக்’
தல அஜீத்தின் ஆரம்ப கால நண்பரான ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த ‘ஜி’ படம் ஞாபகம் இருக்கிறதா! இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்ததென்று ஞாபகம்! சக்கவர்த்தி – தல அஜீத் கூட்டணியின் கடைசிப் படமும் இதுதான். அந்தப் படம் தொடங்கியதிலிருந்தே பணப் பிரச்சினைகளால் தட்டுத் தடுமாறி நீண்ட கால புராஜெக்டானது நாடறிந்த சங்கதி.
இப்போ சொல்ல வந்த செய்தி அதுவல்ல! பெப்சி குளிர்பானம் அப்போதுதான் இந்தியாவுக்கு வந்து சில ஆண்டுகள் இருக்கும். நம்மூர் கோலி குண்டு கலரைக் காலி பண்ண விதவிதமா மார்கெட்டிங் யுக்திகளை கையாண்டு கொண்டிருந்தார்கள். அதனடிப்படையில் அஜீத்தை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுப்பதென்று தீர்மானித்து தொடர்பு கொண்டார்கள்.
“ஜி’ படத்துக்கு பிராண்டிங் பண்றோம்…படத்தோட டைட்டில்ல ‘பெப்சி’ லோகோ போடணும். அஜீத் ஒரே ஒரு நாள் விளம்பரப் படம் பண்ணித் தந்தால் போதும்… ஒரு கோடி கொடுக்கிறோம்,” என்று எனக்கு அசைன்மெண்ட் கொடுத்தார்கள். பெப்ஸியின் உள் நோக்கமோ, அரசியலோ எனக்கு அப்போது துளியும் தெரியவில்லை! இந்தத் தகவலை நானும் கேஷுவலாக இயக்குநர் லிங்குசாமியிடமும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடமும் சொன்னேன்.
‘நல்ல விஷயம்…சார்கிட்ட நீங்களே பேசுங்கள்’ என்று இருவரும் சொன்னார்கள். அந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் ஏவி.எம் கார்டனில் அப்போது நடந்து கொண்டிருந்தன. அஜீத், லிங்குசாமி, சக்கரவர்த்தி மூவருக்கும் அப்போது பேச்சு வார்த்தை கிடையாது. டப்பிங் இடைவேளையில் மெதுவாக விஷயத்தை தல கவனத்துக்கு கொண்டுபோனேன். எல்லாத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஒரு கோடி என்பது அப்போது எவ்வளவு பெரிய தொகை என்பது உங்களுக்கே தெரியும்! ‘இது நடந்தா உங்களுக்கு ஏதாவது பெனிஃபிட் கிடைக்குமா’ என்றார். ‘கிடைக்கும் ஜி’ என்றேன். ‘அதை நான் உங்களுக்குத் தர்றேன்…இந்த மாதியான விஷயத்தை என்கரேஜ் பண்ணாதிங்க…’ என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார். ‘எனக்கு பெப்ஸி குடிக்கிற பழக்கம் கிடையாது.
எனக்குப் பிடிக்காத ஒரு விசயத்தை தமிழக மக்கள் மீதோ, என் ரசிகர்கள் மீதோ திணிக்கிறது அவர்களுக்கு செய்கிற துரோகமில்லையா!’ என்று அவர் கேட்டபோது என்னிடம் பதிலில்லை! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்போதைய மனநிலையில் அவர்மீது எனக்கு கோபமாக வந்தது. என்னடா இந்த மனுஷன் இப்படி இருக்கார். ஒரே ஒருநாள் ஷூட்டிங்குக்கு ஒருத்தன் ஒரு கோடி ரூபாய் தர்றேன்னு சொல்றான்.
அசால்ட்டா வேணாம்னு சொல்றார். இவரெல்லாம் எப்படிப் பொழைக்கப் போறார் என்ற கவலை வேற! தவிர, அஜீத்துக்குமே அப்போது பயங்கர பண நெருக்கடி! ‘ஜி…எதுக்கும் இன்னொரு வாட்டி யோசிச்சிட்டு சொல்லுங்க’ என்றேன். பதிலேதும் சொல்லாமல். ‘ஜி…வாங்க காஃபி சாப்பிடலாம்’, என்றார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எனக்கு இப்போதுதான் புரிந்தது! பெப்ஸி என்ற பன்னாட்டு முதலை நமது நிலத்தடி நீரையும் வியர்வையையும் எப்படியெல்லாம் உறிஞ்சு எடுத்துக்கிட்டிருக்கான் என்பது நாடறிந்த அரசியல். எல்லாம் சரி! இப்போ எதுக்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? நோ பாலிட்டிக்ஸ்!
- தல ரசிகன்